Wednesday, July 15, 2009

என் மழைக் காதலி

வானத்து வீதியிலெ ஓரமாய் அமர்ந்த நான்
மேகங்கள் போக்குவரத்தை மௌனமாய் ரசித்து வந்தேன்
வெள்ளை மேகங்களின் வெண்ணிற ஆடைக்குள்
கருப்பு கன்னிகையின் காதலைத் தேடி நின்றேன்

சோலை நாட்டில் வாழ்ந்த போது
சொல்லாமல் வந்தாலும் நில்லாமல் போகமாட்டள்
நெடுநாள் கதை பேசி அன்பாய் அழுதிடுவாள்
நீண்ட எங்கள் சந்திப்பில் நிறைவாய் கரைந்திடுவேன்

பாவிகளின் பொறாமையில் பரிதவித்த காதல் நட்பு
பாலைக்கு வந்தபின் பந்தம் தோய்ந்தது
வானத்து வீதிகளில் வரங்கள் பல கேட்டு
எங்கே அவள் என்று ஏங்காத நாளில்லை

முன்னறிவிப்பின்றி மூர்க்கமாய் வந்திடுவாள்
இரவில் வந்து இடியாய் கத்திடுவாள்
மின்னல்கள் மத்தியிலே களிநடனம் கொண்டிடுவாள்
கோபக் கனல் கொண்டு கொட்டித் தீர்த்திடுவாள்

ஆத்திரப் பார்வையாலே அல்லல் படுத்திடுவாள்
ஏன் இத்தனை கோபம் என்றால்
எங்கே அவனென்று என்னை அழைத்திடுவாள்
காதலன் நான் பார்த்ததெல்லாம் வீதிகளில் அவள் கண்ணீர்

வெள்ளை மேகங்களின் வெண்ணிற ஆடைக்குள்
கருப்புக் கன்னிகையின் கால் சலங்கை நாதம் கேட்டேன்
இருப்புக் கொள்ளாமல் விழிகள் வழி தேட
இதயம் கனத்து என் இளமை விழித்து நின்றேன்

பிரிந்து வாழ்ந்தால்தான் பிரியமானவள் புரிவாள்
இழந்து நின்றால்தான் இருப்பதின் தரம் தெரியும்
வருந்தி வாழ்ந்தால்தான் மகிழ்வின் குணமறியும்
வாழ்ந்து இறந்தால்தான் பிறப்பின் பலன் புரியும்

குளிர் என் நெஞ்சை வருட,
குனிந்த அவள் எனை நெருங்க
எழுந்த என் கால்கள் நீந்த
வானத்தில் நான் மிதந்தேன்

ஒருநாள் சந்திப்பு, ஓராயிரம் தவிப்புகள்
வருடம் ஒருமுறைதான் வந்தாலும்
வரண்ட என் நெஞ்சத்தில் வண்ண மழை தூவிடுவாள்
வருடத்து கதைகளை நான் விளக்கமாய் பேசி வைப்பேன்

இயற்கையில் உதிர்ந்த இம்மனிதப் பூக்கள்
இயல்பின் வாழ்க்கையில்தான் இதயம் திறக்கும்
காயம் இல்லா இம்மனித இதழ்கள்
மேக மெத்தைக்குள் ஓர் மெல்லிய சந்திப்பு

கருப்புக் காதலியின் மேனி எனை அணைக்க
கருத்த அவள் கைகளுக்குள் நான் தவழ
எத்தனை நாள் தவிப்பு, அழுத அவள் விழிகளுக்குள்
என் ஆன்மாவைத் தேடி நின்றேன்

மழையாய் கரைந்தாள் மானிடம் செழிக்க
அவளில் குளித்தேன் மன அழுக்குகள் நீங்க
இயற்கையில் தோய்ந்து நான் என்னுள் எழுந்தேன்
இறைவன் அருகில் என் இருப்பிடம் தேடி